ராய்ச்சூர் மாவட்டம், கல்லுாரில் அமைந்துள்ளது 12ம் நுாற்றாண்டை சேர்ந்த மார்கண்டேஸ்வரர் கோவில்.
புராணங்களின்படி, மகரிஷி மிரிகண்டு – தேவி மருதவதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. குழந்தை வரம் வேண்டி, சிவனை நினைத்து மகரிஷி தியானம் செய்தார். இவரின் தியானத்தால் மகிழ்ந்த சிவன், அவர் முன் தோன்றி, ‘உனக்கு நீண்ட நாள் வாழக்கூடிய 100 முட்டாள் பிள்ளைகள் வேண்டுமா அல்லது 16 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய புத்திசாலி மகன் வேண்டுமா’ என கேட்டார்.
அதற்கு மகரிஷி, ‘புத்திசாலி மகன் வேண்டும்’ என்றார். இதையடுத்து, அத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு மார்கண்டேயா என பெயர் சூட்டினர். இச்சிறுவன் வளர வளர மிகவும் புத்திசாலியாகவும், அழகு நிறைந்தவராகவும் இருந்தார். வேதங்கள், சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார்.
சிவன் அளித்த வாக்கு, மகரிஷி தம்பதியை வாட்டியது. இதையறிந்த மார்கண்டேயா, ‘நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்’ என்று சமாதானம் செய்தார். இதையடுத்து இரவு, பகல் பாராமல் சிவனை நினைத்து மார்கண்டேயா தியானம் செய்தார். மார்கண்டேயாவின் ஆயுள் முடியும் நிலையில், எமதர்மராஜா அங்கு வந்தார். சிவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்த மார்கண்டேயாவின் கழுத்தில் தன் பாசக்கயிற்றைவீசினார்.
இதனால் கோபம் அடைந்த சிவன், எமன் முன் தோன்றி, அவருடன் போரிட்டார். இந்த போரில் வெற்றி பெற்ற சிவன், மார்கண்டேயனுக்கு சாகாவரம் அளித்தார். இதனால், சிவனுக்காக மார்கண்டேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் அருகில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதால், மனம் துாய்மை ஆவதுடன், வாழ்க்கை செழிப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மஹா சிவராத்திரியின் போது, பக்தர்கள் விடிய விடிய உணவருந்தாமல், சிவனை நினைத்து வழிபடுவர். அதுபோன்று முனிவர் மார்க்கண்டேயா பிறந்த நாளும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எப்படி செல்வது?
* ரயிலில் செல்வோர், ராய்ச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.
* பஸ்சில் செல்வோர், ராய்ச்சூர் சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.