‘சிலிகான் சிட்டி’ பெங்களூரு ஐ.டி., சிட்டி மட்டுமல்ல. வரலாற்று சிறப்பு மிக்க புராதன கோவில்களின் நகர் என்றாலும் மிகையில்லை. பெங்களூரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோவில்கள் உள்ளன. பெங்களூரில் பனசங்கரி கோவில், சோமேஸ்வரர் கோவில், காடு மல்லேஸ்வரர், பிளேக் மாரியம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்கள் புராதன பிரசித்தி பெற்றவை. இவற்றில் ஜலகண்டேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். அற்புதமான இக்கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சோழ மன்னர்கள் அதேபோன்று, பெங்களூரின் கலாசிபாளையாவில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலும், சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக, புராணங்கள் கூறுகின்றன. அதன்பின் ஆட்சிக்கு வந்த கெம்பேகவுடா, கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சீரமைத்தார். கோட்டையின் மத்திய பகுதியில் இருப்பதால், கோட்டை ஜலகண்டேஸ்வரர் என பக்தர்கள், அழைக்கின்றனர்.
கோவிலின் கர்ப்பகிரஹத்தில் சிவன், பார்வதி தேவி மற்றும் கைலாசநாதர் என, மூன்று தனித்தனி சிலைகள் உள்ளன. கலாசிபாளையா பஸ் நிலையம் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தினமும் பெருமளவில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வெளியூர்களில் இருந்தும் வருகின்றனர்.
ஜலகண்டேஸ்வரர் மற்றும் பார்வதி தேவியை தரிசனம் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகள் நீங்கும். வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். பெங்களூருக்கு வரும் பலரும், இக்கோவிலை தரிசனம் செய்கின்றனர். ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுகிறது. வாரந்தோறும் திங்கட் கிழமை, பிரதோஷம், பவுர்ணமி போன்ற சிறப்பு நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
எப்படி செல்வது?
மெஜஸ்டிக்கில் இருந்து மூன்று கி.மீ., மல்லேஸ்வரத்தில் இருந்து, ஆறு கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து 9 கி.மீ., சிவாஜி நகர், எம்.ஜி., சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் கலாசிபாளையா உள்ளது. பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கலாசிபாளையாவுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார், ஆட்டோ வசதியும் உள்ளது.
தரிசன நேரம்: காலை 5:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை
தொடர்பு எண்: 96636 00619
அருகில் உள்ள கோவில்கள்: தர்மராய சுவாமி கோவில், கோட்டை வெங்கடரமண சுவாமி கோவில், அய்யப்ப சுவாமி கோவில், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதசுவாமி கோவில், சாய்பாபா கோவில்.