பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு தங்க கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர். தினமும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனி வாகனத்திலும் வலம் வருவர். கற்பகத்தரு, கிளி, பூத, சிங்கம், குதிரை, கைலாச, காமதேனு, ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்ன வாகனங்களில் அருள்பாலிப்பர். மே 5 காலை நடராஜர் வீதி உலா, மே 6 காலை பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் வருகிறார். மே 7 திருக்கல்யாணம் மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கும். மே 8 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. மே 9 காலை 9:30 மணிக்கு சித்திரை தேரோட்டம், மே 10ல் தீர்த்தவாரி முடிந்து, கொடி இறக்கப்பட்டு மறுநாள் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.