சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி பாலாலயம் நடக்கிறது. சிதமபரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடராஜர் கோவிலில் பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று, சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக தில்லை கோவிந்த ராஜப்பெருமாள் கோவில் உள்ளது. மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவர் தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் எழுந்தருளியுள்ளனர். கோவில் திருப்பணி துவக்கமாக, வரும் 6ம் தேதி பாலாலயம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை நாளை (4ம் தேதி) மாலை துவங்க உள்ளது. ஆயிரங்கால் மண்டப முகப்பில் யாகசாலை பூஜைக்கான குண்டங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் திருவேங்கடவன், சவுந்தரராஜன், சுதர்சனாச்சாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.