காரியாபட்டி; காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் பழங்கால கோயில்கள் பல சிதிலமடைந்து வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். புனரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் சிவாலயங்கள் கட்டப்பட்டன, ஒரு சில இடங்களில் மட்டும் முருகன், விநாயகர், பெருமாள் கோயில்கள் உள்ளன. அன்னச் சத்திரங்கள், வழிப்போக்கர்கள் தங்கும் மடங்கள் ஏராளமாக உள்ளன. இப்பகுதி கோயில்கள் ஒவ்வொன்றும் புராணங்களை உணர்த்துகிறது. தற்போது வரலாறு மறைந்து வருவதுடன் பெரும்பாலான கோயில்கள் கவனிப்பாரற்று, சிலைகள் உடைந்து கிடக்கின்றன. சிதிலமடைந்து கிடக்கும் கோயில்களை கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர். இக்கோயில்கள் சில சிவகங்கை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானதாக இருக்கின்றன. சில கோயில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ளன. பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் சில கோயில்களில் பக்தர்களின் உதவியுடன் பூஜைகள் நடத்தப்பட்டு, அவ்வப்போது கும்பாபிஷேகம் நடக்கிறது.
பழமையான கோயில்கள் பல காணாமல் போகும் நிலை உள்ளது. இப்படியே விட்டு விட்டால் இன்னும் சில காலங்களில் முற்றிலும் அழியும் நிலை உள்ளது. இதனைப் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் முன் வந்தாலும் தொடர்ந்து செய்ய முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமஸ்தானங்களுக்கு பாத்தியப்பட்ட கோயில்களை சம்பந்தப்பட்ட நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை அரசும் புனரமைக்க முன் வந்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.