திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 53 ஆம் ஆண்டு வைகாசி விசாக விழா நடந்து வருகிறது. கடந்த மே 31 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் பாலசுப்பிரமணியசுவாமிக்கு தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் 9 திங்கட்கிழமை அன்று காலை பால்குடம், மயில் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்து சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 9:00 மணிக்கு மேல் கோயில் முன்புறம் உள்ள திடலில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் மயில் வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர். தொடர்ந்து பத்து நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.