சூலூர்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில், தங்க தேர் திருப்பணி துவங்கி வைக்கப்பட்டது.
சூலூர் அடுத்த செஞ்சேரிமலையில் பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூச தேர் திருவிழா, பங்குனி உத்திரம்,கந்த சஷ்டி சூரசம்ஹார விழா பக்தி பரவசத்துடன் நடக்கும். சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலமும் நடக்கிறது. இங்கோவிலுக்கு தங்க தேர் செய்ய, அறங்காவலர் குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். திருநாவுக்கரசர் திருமட முத்து சிவராம சாமி அடிகளார் தலைமையில், திருப்பணிக்குழ அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நிதி திரட்டும் பணி நடந்தது. தேர் செய்ய மரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதையடுத்து, 7 கோடி ரூபாய் மதிப்பில், 80 கிலோ தங்கத்தில் தங்கத்தேர் வடிவமைக்கும் திருப்பணி நேற்று நடந்தது. முத்து சிவராம சாமி அடிகளார் திருப்பணியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீக சான்றோர்கள் பங்கேற்றனர். 10 மாதங்களுக்குள் தங்க தேர் திருப்பணியை நிறைவு செய்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, திருப்பணி குழுவினர் கூறினர்.