மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் எண்ணங்களின் சங்கமத்தின் 10 தொண்டு அமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் அருட்கொடைக்கான காசோலை மற்றும் விருது சான்று வழங்கப்பட்டது.
எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டு வருடத்திற்கு 100 தொண்டு நிறுவனங்களை சந்திப்பது என முடிவெடுத்து இதுவரை தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 100 தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துள்ளதுஇந்த அமைப்பினர் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சங்கமிக்கும் விழா நடத்துகின்றனர். இவ்வாண்டு 21ம் ஆண்டு விழா திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி நடக்கிறது. இந்த சேவை அமைப்புகளின் உறுப்பினர்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 தொண்டு அமைப்புகளுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அருட்கொடை மற்றும் சிறந்த சமுதாய சேவகர் விருது வழங்கப் படுகிறது. இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 தொண்டு அமைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம், விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சென்னை பிரபாகர், ஒருங்கிணைப் பாளர்கள் நிர்மலாதேவி, திருபுவனம் பாஸ்கர், சோழமண்டல தலைவர் ஜோதி ஆகியோரிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்து ஆசி வழங்கினார். இவ்வாண்டு விழாவில் மேலும் என்.டி.எஸ்.ஓ. அமைப்பின் சார்பில் 4 தொண்டு அமைப்புகளுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அருட்கொடை வழங்கப்படுகிறது. இதுவரை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் எண்ணங்களின் சங்கமத்தின் 121 தொண்டு அமைப்புகளுக்கு குருமகா சந்நிதானம் விருதுகளை வழங்கி உள்ளார்கள் என நிறுவனர் பிரபாகர் கூறினார்.