டிசம்பர் 24,2025
கூடலூர்; சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்ட கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், முதுமலை சாலையை வன ஊழியர்கள் பாதுகாப்புடன் கடந்து வந்தனர்.
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் வந்து செல்கின்றனர். கர்நாடகவை சேர்ந்த பல ஐயப்ப பக்தர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக பாத யாத்திரையாக சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு, பாதயாத்திரையாக ஐயப்பன் கோவிலுக்கு செல்ல துவங்கி உள்ளனர். மைசூரு பாலியா பகுதியைச் சேர்ந்த 25 ஐயப்பன் பக்தர்கள் குருசாமி பிரசந்தா தலைமையில் 18ம் தேதி, மைசூரில் இருந்து பாத யாத்திரையை துவங்கினர். இவர்கள் நேற்று முன்தினம், மதியம் 1:00 மணிக்கு தமிழக . கர்நாடக எல்லையான கக்கனல்லாவை கடந்து, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். வன ஊழியர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் வந்தனர். இவர்கள், மாலை தொரப்பள்ளி வந்து, இரவு அங்குள்ள ராமர் கோவிலில் தங்கினர். அங்கிருந்து, நேற்று, காலை பாத யாத்திரையை துவங்கிய ஐயப்ப பக்தர்கள் கூடலூர் கடந்து கேரளா சென்றனர்.
ஐயப்ப பக்தர்கள் பிரசன்னா, ரேவன்குமார் கூறுகையில், நாங்கள் மைசூரிலிருந்து 18ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாத யாத்திரையை துவங்கி மேற்கொண்டு வருகிறோம். பந்திப்பூர் மற்றும் முதுமலை வனப் பகுதி சாலையை கடந்து செல்ல வன ஊழியர்கள் எங்களுக்கு உதவினார்கள். தினமும் 35 முதல் 50 பாதயாத்திரை செல்கிறோம். இரவில், கோவில்களில் தங்கி, பகல் நேரத்தில் பாத யாத்திரையை தொடர்கிறோம் என்றனர். வனத்துறையினர் கூறுகையில், முதுமலை வனப்பகுதியில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாத யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்து, பாதுகாப்புடன், கடந்து செல்ல வேண்டும். பாதுகாப்பின்றி வனப்பகுதியில் நடந்து செல்வது தவிர்க்க வேண்டும் என்றனர்.