மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழா நாட்களின் போது அம்மன் பல்வேறு வாகனங்களில் எழும்பருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று ஆடி தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் நேற்று மாலை 6:15மணிக்கு தேருக்கு எழுந்தருளிய பிறகு ஏராளமானோர் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர்.தேர் நிலையை அடைந்தவுடன் தேருக்கு முன் ஏராளமானோர் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற உள்ளது.நாளை சந்தன காப்பு உற்சவத்துடன் ஆடித்தபசு திருவிழா நிறைவு பெறுகிறது.