ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவம் திருவிழாவின் ஏழாம் திருநாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பல்லக்கில் எழுந்தருளி கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளினார்.
ஆவணி திருப்பவித்ரோத்ஸவ திருவிழாவின் ஏழாம் திருநாளான இன்று நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சிக்காக நம்பெருமாள் உபயநாச்சியாருடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கொட்டாரத்தில் எழுந்தருளினார். அங்கு நெல்லளவு கண்டருளினார்.இந்த நிகழ்ச்சியின்போது நம்பெருமாள் நெல்லை அளந்து போடுமாறு பணியாளருக்கு உத்தரவிட்டார். அப்போது பணியாள் தங்க மரக்காலில் நெல்லை அளந்து போட்டார். அப்போது பணியாள் ஒன்று..இரண்டு..மூன்று என்றும் ஸ்ரீரங்கம் பெரிய கோவில் வளர என்று சொல்லியும் நூறு, ஆயிரம், லட்சம் கோடி என்று சொல்லி நம்பெருமாள் முன்னதாக நெல் அளந்து போடப்பட்டது. இருப்பில் உள்ள நெல்லின் அளவை நம்பெருமாளே உபயநாச்சியாருடன் வந்த ஆய்வு செய்வதாக பொருள்படும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.