திருவாலங்காடு: சின்னம்மாபேட்டை கிராமத்தில், மூன்று நாட்களாக நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழா, நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தில், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ணருக்கு தனி சன்னிதி உள்ளது.
இங்கு, கிருஷ்ணர் ஜெயந்தி நாளான கடந்த 4ம் தேதி காலை, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் படையலிட்டு வழிபட்டனர்.
பின், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு அலங்காரத்தில் கோகுல கிருஷ்ணர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், அன்று இரவு தெருக்கூத்து நடந்தது.
தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. நாடகத்தில், கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற, பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. அப்போது, நாடக கலைஞர் ஒருவர், அர்ச்சுனன் வேடம் அணிந்து, 50 அடி உயர தபசு மரத்தில், ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியபடி ஏறினார்.
இந்நிகழ்ச்சியுடன், கடந்த மூன்று நாட்களாக நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவடைந்தது.