பதிவு செய்த நாள்
17
நவ
2019
02:11
மதுரை:சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முதல், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மதுரையில், சேவா சங்க மாநில நிர்வாகிகள் விஸ்வநாதன், அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:இச்சங்கத்திற்கு, தமிழகத்தில், 2,600 கிளைகள் உள்ளன; பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். கேரள நீதிமன்றத்தால், அய்யப்பன் கோவிலில் அன்னதானம் வழங்க, அனுமதி பெற்ற, ஒரே தனியார் அமைப்பு இது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள முகாம்களில், துாய்மையான சுக்கு தண்ணீர் வழங்குதல், இலவச மருத்துவ உதவி, துப்புரவு பணி மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளில் சேவா சங்க உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர்.வழக்கம் போல் இந்தாண்டும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு, தினமும், மூன்று வேளை, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.தமிழக அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, வேலுார், திருச்சி, கன்னியா குமரி, தேனி உட்பட, 14 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. இதில், 3,000 தொண்டர் கள் சுழற்சி முறையில் சேவையாற்றி வருகின்றனர்.இதுதவிர, சபரிமலையில், துப்பரவு பணியாளர்களாக, 900 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் இருமுடியில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.