பதிவு செய்த நாள்
18
நவ
2019
11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, அயோத்தியில் உள்ள சுக்ரீவகிலா என்னும் இடத்திற்கு, ராமர், லட்சுமணன், சீதா விக்கிரகங்கள் கொண்டு செல்லப்பட இருக்கின்றன. இதற்காக, நேற்று இரவு, அந்த சிலைகள் பொது மக்கள் தரிசனத்திற்காக, வீதியுலா நடைபெற்றது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி அருகில், சுக்ரீவகிலா என்னும் இடத்தில், ராமரின் பக்தனான சுக்கிரீவனுக்கு சன்னதி அமைந்துள்ளது.இந்த கோவில் கும்பாபிஷேகம், வரும் பிப்., 20ல் நடைபெறுகிறது. இதற்காக, அயோத்தி சுக்ரீவகிலா பீடாதிபதி மற்றும் காஞ்சி ராமானுஜதயா ஆகிய அமைப்பு மூலம், இந்த திரு உருவ சிலைகள் செய்யப்பட உள்ளன. நேற்று, ராமரின் நட்சத்திரமான நாள் என்பதால், அந்த சிலைகள் பொது மக்கள் தரிசனத்திற்காக, வரதராஜப் பெருமாள் கோவில் மாட வீதியில் வீதியுலா சென்றன.இன்னும், ஓரிரு நாட்களில், காஞ்சியில் இருந்து, இந்த சிலைகள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.