சூரியனின் புதல்வன் ஜடாயு, பறவை (கழுகு) இனத்தைச் சேர்ந்தவர். அயோத்திக்கு துன்பம் விளைவித்த சம்பராசுரன் என்பவனை அழிப்பதற்கு தசரதருக்கு பலவழிகளில் உதவியவர். எனவே, தசரதர் ஜடாயுவைத் தன் உயிர்த்தோழனாகப் போற்றினார். தசரதரின் புத்திரர்களான ராமலட்சுமணர், ஜடாயுவை தமது பெரியதந்தையாகப் போற்றினர். சீதையை கடத்திச் சென்ற போது ராவணனை ஜடாயு தடுத்தார். ஆனால், கொடிய ராவணன், ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். ராமன் சீதையைத் தேடி அலைந்த போது குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் கண்டு, நடந்த உண்மைகளை அறிந்தார். உயிர் பிரியும் நேரத்தில் தன் மடியிலேயே ஜடாயுவை கிடத்தி ஆசுவாசப் படுத்தினார். அவர் இறந்ததும், ஈமக்கிரியைகளை செய்து வைகுண்டம் அளித்தார். கடவுளே, தனக்கு புதல்வனாக வாய்க்கப் பெற்றும் தசரதருக்கு அவரது கையால் இறுதிக்கடன் பெறும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பறவையான ஜடாயுவுக்கு அது கிடைத்தது, இதைத்தான் விதி என்கிறார்கள். எதற்கும் கொடுப்பினை வேண்டுமல்லவா!