பதிவு செய்த நாள்
07
டிச
2019
11:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹாதீபம் ஏற்ற உள்ள, தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழா வரும், 10ல் நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹாதீபமும் ஏற்றப்பட உள்ளன. இதற்காக, ஐந்தரை அடி உயரமுள்ள, ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்றப்படும் மஹா தீபம், 40 கி.மீ., தூரம் வரை பார்க்க முடியும். இந்த கொப்பரையில் தீபம் ஏற்றும்போது, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகட்டில் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையை மலைஉச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் பொருத்தப்பட்டுள்ளன. இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என, வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்க படமும், தீபவிளக்கில் அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் போன்று, படம் வரையப்பட்டு, நேற்று கோவிலிற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில், நெய்யாகவோ அல்லது பணமாகவோ செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.