பதிவு செய்த நாள்
19
ஜன
2020
08:01
ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில், முழு அடைப்பு போராட்டம் இன்று (ஜன.,19) நடந்தது. அதே நேரத்தில், சாய்பாபாவின் கோவில் திறந்திருந்தது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும் இல்லை என, அவர்கள் கூறியுள்ளனர். உத்தவ் தாக்கரேயின் பேச்சைக் கண்டித்து, ஷீரடியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் போராட்டம் இன்று துவங்கியது. ஷீரடி மற்றும் அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பங்கேற்றன. கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை. அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின் உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப்பட்டன; பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மாநில அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.