பதிவு செய்த நாள்
22
ஜன
2020
11:01
ஊட்டி: குந்தா தூனேரி கிராமத்தில்,தொட்டப் பா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மஞ்சூர் அருகே உள்ள குந்தா தூனேரி கிராமத்தில், 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜன., மாதம் இந்த கிராமத்தில் தொட்டப்பா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கி பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று, தொட்டப்பா திருவிழாவின் பாரம்பரிய கில்லி விளையாட்டை ஊர் தலைவர் போஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னாள் ஊர் தலைவர் கக்கமல்லன், கோவில் பூசாரி மூர்த்தி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, குழந்தைகளுக்கு சாக்கு, பன், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு மியூசிக் சேர், ஸ்பூன் போட்டிகள் நடத்தப்பட்டது. மாலையில் நடந்த பாரம்பரிய படகர் நடனத்தில், ஆண்கள், பெண்கள் இணைந்து ஆடி, பாடி மகிழ்ந்தனர். இறுதியாக, ஆண்கள் மட்டும் பங்கேற்கும், படுகரின கலாச்சார ஆட்டமான கும்மி ஆட்டம் ஆடி தொட்டப்பா திருவிழாவை நிறைவு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தன், ரவி, விஸ்வநாதன் உட்பட திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.