பதிவு செய்த நாள்
25
ஜன
2020
12:01
உத்திரமேரூர்: கடம்பர் கோவில், கடம்பநாத சுவாமி கோவிலிலுக்கு, பல ஏக்கர் நிலம், வருவாய் இருந்தும், 2016க்கு பின், பிரம்மோற்சவம் நடத்தவில்லை என, கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, செய்யாற்றின் தென்கரையில், வெங்கச்சேரியில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, கடம்பர்கோவில்.பொது ஏலம்இக்கிராமத்தில் உள்ள பழமையான ஆவுடைநாயகி அம்பாள் சமேத கடம்பநாத சுவாமி கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம், கோலாகலமாக நடந்து வந்தது.காலை, மாலையில், சுவாமி, பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார். உற்சவத்தில், கடம்பர்கோவில், கன்னிகுளம், வயலாத்துார், வெங்கச்சேரி என, 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், குடும்பத்துடன் பங்கேற்பர்.கோவிலுக்கு சொந்தமாக, 100 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், சவுக்கு பயிரிடப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில், பொது ஏலம் விடப்படுகிறது.கோரிக்கைஓராண்டுக்கு முன், 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட சவுக்கு, ஏலம் விடப்பட்டது. கோவிலுக்கு வருமானம் இருந்தும், மூன்று ஆண்டுகளாக, பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.வரும், பங்குனி மாதத்திலாவது பிரம்மோற்சவம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக, 2005ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள அலுவலகம், மடப்பள்ளி, யாகசாலை மண்டபம் சிதிலமடைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக திருப்பணி ஏற்பாடுகளுக்காக தொல்லி யல் துறை, பொறியாளர்கள், உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர் குழுவினரின் ஒப்புதல் கிடைத்தவுடன் திருப்பணி துவக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். அதன்பின், பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.சோ.செந்தில்குமார்,செயல் அலுவலர் கடம்பர்கோவில்.