செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களை பாடினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். பக்தர்கள் சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். கர்நாடக ஐகோர்ட் நீதிபதி நடராஜ் சாமி தரிசனம் செய்தார்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். தை அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதல் இரவு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.