பதிவு செய்த நாள்
25
ஜன
2020
01:01
தேனி: நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி சந்தை கவுமாரியம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வேல்முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வீரபாண்டி முல்லைப் பெரியாற்று கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.கம்பம்: தை அமாவாசையை முன்னிட்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு, சுருளி அருவியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர்.
தை அமாவாசை என்பதால் சுருளி அருவியில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் குவியத் துவங்கியது. அருவியில் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சாதுக்களுக்கு அன்னதானம், உடை தானம் உள்ளிட்ட தானங்களை செய்தனர். தொடர்ந்து இங்குள்ள பூதநாராயணர்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.இங்கு ஆதி அண்ணாமலையார் கோயிலில் காலை முதல் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. வேலப்பர் கோயில்,கோடிலிங்கம் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் முன்னோர்கள் வழிபாடு நடந்தது. அரிசி, காய்கறிகள், பூஜை பொருட்களை ஏராளமான பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர். அர்ச்சகர்கள் குழுவினர் அர்ச்சனை செய்தனர். வரதராஜப்பெருமாள், மகாலட்சுமி தாயாருடன் ஊஞ்சல் சேவை நடந்தது.பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி மற்றும் துர்க்கைஅம்மன் உட்படதெய்வங்ளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கம்பம்ரோடு காளியம்மன் கோயில், கவுமாரியம்மன், திரவுபதிஅம்மன் கோயில்கள், காளஹஸ்தீஸ்வரர் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. குலதெய்வம் வழிபாடு நடந்தது.
நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. போடி: போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் பழமையான கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். காலை 10:00 மணி முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். போடி மேலச் சொக்கநாதர் கோயில், பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, நடந்தது. ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து சென்றனர். வேலப்பர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.