பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
ஊட்டி: ஊட்டி அருகே, முத்துநாடு மந்துவில் தோடர் மக்களின், மொற்பர்த் பண்டிகை கோலாகலமாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில், தோடர், கோத்தர், காட்டு நாயக்கர், பனியர், இருளர், குறும்பர் இன பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.உடை, உணவு முறை, வழிபாடு, திருமணம், இறப்பு என, தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.தோடர் மக்களின் வழிபாட்டுக்கு உகந்த நாளாக, ஞாயிற்றுக்கிழமை கருதப்படுகிறது. தோடர் இன மக்களின் தலைமை இடமாக கருதப்படும், ஊட்டி முத்துநாடு மந்துவில், மொற்பர்த் பண்டிகை நேற்று நடந்தது. காலை, 11:30 மணிக்கு, குலதெய்வ கோவிலில் உள்ள, மூன்பவ், அடையள் ஓவ் ஆகிய தெய்வங்களுக்கு, வழிபாடு நடத்தினர். பின், ஒவ்வொரு குடும்பத்தினரும், தலைக்கு, ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடைஅணிந்து, ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். மாவட்டம் முழுவதும் உள்ள தோடர் மந்துகளில் வசிக்கும் மக்கள், விழாவில் பங்கேற்றனர். இன்று, தங்களது வளர்ப்பு எருமைகளை வழிபட்டு, அவற்றுக்கு உப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.