பதிவு செய்த நாள்
29
ஜன
2020
11:01
சின்னாளபட்டி: திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் பல ஆண்டுகளுக்கு முன், காலரா நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாரியம்மன் வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டதால் தீர்வு கிடைத்ததாக நம்பிக்கை உருவானது. இதையடுத்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தெருக்கள் தோறும் தனித்தனியே மாரியம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தாண்டு சந்து மாரியம்மன் திருவிழா 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நடக்கிறது. இதையொட்டி அண்ணா நகர், கலைஞர் காலனி, பாரதிநகர், சோமசுந்தரம் காலனி, தென்புதுார் பகுதிகளில் இருந்து முளைப்பாரியுடன் மெயின்ரோடு அருகே உள்ள பிருந்தாவன தோப்புக்கு சென்றனர். தெருக்கள் வாரியாக பெண்கள் முளைப்பாரி வைத்து, கும்மி அடித்தனர். மல்லிகை உள்ளிட்ட பூக்களைக்கொண்டு தனித்தனியே கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரித்த அம்மன் கரகம், அழகர் கோயிலை வலம் வந்து ஊர்வலம் துவங்கியது. சிலர் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலப் பாதை முழுவதும் மா, வேப்பிலை தோரணங்களுடன், கரகத்திற்கு அபிஷேகம் தொடர்ந்தது. தெருக்கள்தோறும் அம்மன் கொலுவுக்காக ஓலை, கரும்பு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. நீர்மோர், பானகம், கம்மங்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.