பழநி மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி அழகனாக ‘குழந்தை வேலாயுதர்’ என்ற பெயரில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வரலாறு தெரியுமா.... மயிலில் உலகத்தை வலம் வந்த முருகன் கைலாய மலையில் இருந்து தென்திசை நோக்கி புறப்பட்டார். நெல்லிவனமான பழநி மலைக்கு வந்தார். அப்போது இங்கு தவம் செய்த மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னி பகவான் ஆகியோர் முருகனை தரிசித்ததால் குறை நீங்கப் பெற்றனர். இதனடிப்படையில் இத்தலம் ‘திரு ஆவினன்குடி’ எனப் பெயர் பெற்றது. ‘திரு’ என்பது மகாலட்சுமியையும், ‘ஆ’ என்பது காமதேனுவையும், ‘இனன்’ என்பது சூரியனையும், ‘கு’ என்பது பூமாதேவியையும், ‘டி’ என்பது அக்னியையும் குறிக்கும். திருஆவினன்குடி கோயிலில் இவர்களுக்கு சன்னதிகள் உண்டு.