பதிவு செய்த நாள்
25
மார்
2020
05:03
கேள்வி கேட்டவரை புன்னகையுடன் பார்த்த பிள்ளைலோகாச்சார்யார், ‘‘ஒரு நல்ல வைணவன் எதற்காகவும் பெருமாளிடம் அதைக் கொடு இதைக் கொடு என பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்பது அவனைச் சிறுமைப்படுத்துவதாகும். நமக்கொரு தாய் தந்தையை தந்து, உற்றார், உறவினர் தந்து, வசிக்க மனை தந்து, ஊர் தந்து, உலகு தந்து, உணவு தந்து, பேச மொழி தந்து, பார்க்க விழி தந்து, கேட்க காதுகளைத் தந்து என்று எல்லாவற்றையும் நாம் கேட்காமலே நமக்கு தந்த பேரருளாளனுக்கு நமக்கு எதை எப்போது தர வேண்டும் எனத் தெரியாதா என்ன? எனவே நாம் சரணாகதி அடைந்த நிலையில் நம் கடமையைச் செய்தபடி போய்க் கொண்டே இருக்க வேண்டும். மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்’’ என ஒரு நீண்ட விளக்கம் அளித்தார்.
ஆனால் அந்த விளக்கத்திற்கும், கேட்ட கேள்விக்கும் தொடர்பு இருப்பதாக கேட்டவருக்கு புரியவில்லை.
‘‘சுவாமி... தாயார் சன்னதிக்கு முதலில் செல்வதற்கும், இந்த விளக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லையே?’’ என்றார்.
‘‘இருக்கிறது! நான் இன்னமும் முடிக்கவில்லை. தொடர்ந்து கேளுங்கள். எம்பெருமானிடம் இப்படி நமக்கென எதையும் கேட்கத் தேவையில்லை தான். ஆனால் சில சமயத்தில் பிறர் நலனுக்காக பிரார்த்தனை புரியும் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அதிலும் நாடும், ஊரும் இருக்கும் நிலையில் அவன் கருணை பெரிதும் தேவைப்படுகிறதே?’’
‘‘உண்மை தான்... ஆனாலும் தாயாரிடம் செல்லக் காரணம்?’’
‘‘தாயார் தயை மிகுந்தவள்! அவளிடம் பிரார்த்தனை வைத்தால் போதும். அதன் பிறகு அவள் பார்த்துக் கொள்வாள். எம்பெருமான் மார்பிலேயே இருப்பதால், மிக வேகமாக எம்பெருமானிடம் சொல்லி தீர்த்து வைப்பாள். அதற்காகவே தாயாரிடம் செல்கிறேன்’’
‘‘எம்பெருமானிடம் பிரார்த்தித்தால் செவி மடுக்க மாட்டானா அவன்?’’
‘‘சொல்லத் தேவையே இல்லையே. அவன் சர்வக்ஞன்! அவன் அறிந்திராத ஒன்று தான் ஏது உலகில்? அவனிடம் நேரில் பிரார்த்திக்கும் போது அவன் அறிந்திராதவன் போல் நாம் கருதுவதாக ஆகி விடுகிறதே? இதுவே அவனை சிறுமைப்படுத்தும் செயல் என தொடக்கத்தில் கூறினேன். எனவே தான் அவனிடம் செல்லாமல் தாயாரிடம் போகிறேன். இது அவனறிந்த ஒன்றைத் துாண்டுவது போன்ற செயல்’’
‘‘சற்று முன் யாருக்கோ தீ்ங்கு நேரப் போவதாக கூறினீர்களே... அது யாருக்கு?’’
‘‘யார் எனத் தெரிந்தால் இப்படியா பேசிக் கொண்டிருப்பேன். இது என் உள்ளுணர்வு! யாராக இருப்பினும் அந்த தீங்கு தவிர்க்கப்பட வேண்டும்’’
ரங்கநாயகித் தாயாரின் சன்னதி கொடிமரம் கடந்து இரு கல்யானைகளைக் கொண்ட படிகள் மீதேறி, ஊஞ்சல் மண்டபத்தில் நடந்தபடியே பிள்ளைலோகாச்சார்யார் பேசிய பேச்சு, தாயார் சன்னதி வரவும் நின்றது.
எதிரில் ஒன்றுக்கு மூன்றாக தாயாரின் திவ்ய மங்கள ஸ்வரூபங்கள்! வைதீக பிராம்மணர் பிள்ளைலோகாச்சார்யார் வரவும் தீபம் காட்டி தீர்த்தம் தந்து துளசியோடு மஞ்சள் காப்பும் தந்தார்.
இட்டுக் கொண்டு கண்கள் கலங்க நின்ற போது எதிரில் புதிதாக ஒருவன்! பதினாறு முழ வஸ்திரத்தை உடல் முழுக்க சுற்றிக் கொண்டு தலையையும் முக்காடிட்டு மறைத்தவனாக எதிரில் நின்று பிள்ளைலோகாச்சார்யாரை வெறித்தான். அவனுக்கு பூனை விழிகள்! அரிவாள் போல புருவம்! குறுந்தாடி வேறு... முதல் பார்வையிலேயே அவனொரு அந்நியன் என்பது தெரிந்தது.
பிள்ளைலோகாச்சார்யார் தாயார் பக்கம் திரும்பி, ‘‘அம்மா தாயே... தயாபரீ’’ என பிரார்த்தித்து திரும்பினால் அவனில்லை.
சன்னதி வைதீகரிடமும் ஒருவித படபடப்பு.
‘‘சுவாமி... இப்படி அடிக்கடி சிலர் உற்று பார்க்கின்றனர். மிக அச்சமாக உள்ளது’’ என்றார் வைதீக பிராம்மணர்.
‘‘இவர்கள் அந்நிய ஒற்றர்கள். எல்லாவற்றையும் நோட்டமிட்டு அதன்பின் திட்டம் தீட்டி அழிக்க முனைபவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னும் இப்படித் தான் வந்தனர். பெருமாளின் திருமேனி முதல் சேரகுலவல்லித் தாயாரின் திருமேனி வரை சகலத்தையும் அள்ளிச் சென்றனர்.
பின் எம்பெருமானின் திருமேனி டில்லீஸ்வரன் புத்திரிக்கு பிடித்தமான ஒன்றாக மாறியது. அதை மீட்கப்பட்ட பாடு பெரும் பாடு! இது அந்நியர்களின் அடுத்த கட்டம். இம்முறை கோயிலை முழுவதுமாக தரை மட்டமாக்கிடக் கூட முனைவர்’’
‘‘பயமுறுத்துகிறீர்களே... அடுத்து நாம் என்ன செய்திட?’’
‘‘அதற்காகவே வேதாந்த தேசிகரின் வருகையை எதிர்நோக்கி உள்ளேன். யந்த்ர, மந்த்ர, தந்த்ரமாக மட்டுமே பெரும் உத்பாதங்களைத் தடுக்கவும், தவிர்க்கவும் முடியும்! அவர் ஒரு சர்வ சுதந்திரர்! சுத்த சுயம்பிரகாசர்!’’
‘‘அவர் எப்போது வருவார்?’’
‘‘வந்தபடியே தான் இருக்கிறார்! வழியில் ஸ்ரீமுஷ்ணம், திருக்கோவிலுார் திவ்ய தேசங்களை தரிசித்து வரக் கூடும். எப்படியும் நாலைந்து நாளாகலாம்’’
‘‘அதற்குள் இங்கே ஏதாவது உத்பாதம் ஏற்பட்டால்?’’
‘‘ஆகாது. தாயாரிடம் பிரார்த்தனை செய்தாயிற்று. அவள் பார்த்துக் கொள்வாள். அதே சமயம் நம் உயிரைப் பொருட்படுத்தாமல் இந்த கோயில்களை காப்பாற்றிட துளியும் தயங்கக் கூடாது’’
பிள்ளைலோகாச்சார்யார் சன்னதி வைதீக பிராம்மணருக்கு தைரியம் அளித்தவராக தன்னோடு வந்த அன்பருடன் அடுத்து நேராக அரங்கநாதப் பெருமான் சன்னதி நோக்கி நடந்தார்.
இரவு நேரம்!
அங்கங்கே செருகப்பட்டிருந்த தீவட்டிகள் அணைவது போல் எரிந்தன. தீவட்டிக்காரர்கள் வேப்பெண்ணெய்யுடன் வந்து எரியும் நெருப்பினை தழைத்து பின் எண்ணெய்ச்சட்டியில் முக்கி எடுத்து திரும்ப தீ மூட்டுவர். அதன்பின் ஐந்து நாழிகை அது எரியும். நடை சாற்றும் சமயம் அணைத்து விட்டுச் செல்வர். பிள்ளைலோகாச்சார்யார் அவர்கள் செயலைப் பார்த்து வேகமாக நடக்கலானார்.
ஆனாலும் பயனில்லை. அரங்கன் சன்னதி நடை சாற்றப்பட்டு விட்டிருந்தது. வெளிக்கதவையும் மூடியாயிற்று. எந்த நிலையிலும் மூடிய கதவை திறக்க மாட்டார்கள். இனி விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் திறப்பார்கள்.
இவை பின்பற்ற வேண்டிய நெறிகள். அதை போதித்திடும் பிள்ளைலோகாச்சார்யாரே மீறுவாரா என்ன?
வருத்தமுடன் திரும்பினார். அரங்க தரிசனம் என்பது அவருக்கு அன்றாட கடமை. அன்று அது நடவாது போனதில் இனம் புரியாத வேதனை!
எப்போதும் இப்படி ஆனதேயில்லை.
இது கூட கெட்ட நேரத்தின் அறிகுறி தானோ?
பிள்ளைலோகாச்சார்யாரின் மனதிற்குள் கேள்வியின் குடைசல். எம்பெருமானே பெரிதாக ஏதோ கேடு நடக்க உள்ளது. அதனால் தான் இங்கேயும் தரிசனம் வாய்க்கவில்லை. நல்ல வேளையாக தாயாரை வணங்க முடிந்ததே! இனி அவள் கைகளில் தான் நம் நெறிப்பாடே உள்ளது.
‘‘தாயே கருணை செய். தேசிகன் விரைவாகவும், நலமுடனும் திரும்ப கருணை செய்’’ என பலமான பிரார்த்தனை!
நள்ளிரவு!
ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள சுடுகாட்டில் அந்த மாந்திரீகன் பூஜையில் இருந்தான். அவன் முன்னால் பெரிதாக நெருப்பு வளையம். அதிலும் அவ்வப்போது பூக்களைப் போட்டு வளையத்துக்குள் தான் எல்லாம் உள்ளது போல நடந்தான். அதன் கிழக்கு பாகத்தில் நாக உருவம் வரையப்பட்டு அதன் மீது சங்கபாலன் அடங்கியிருக்கும் கூடையும் இருந்தது. இவன் மந்திரம் சொல்லிப் போட்ட பூக்களால் அது மூழ்கிப் போனது.
அவன் நெற்றியிலும் ரத்தப் பொட்டு! கருப்பு ஆடை உடுத்திக் கொண்டு கடும்பூஜையில் இருந்தான். இவன் இங்கே பூக்களைப் போடப் போட பிரம்புக்கூடை அசைந்தது. ஒரு கட்டத்தில் அதன் மூடி திறக்க சட்டென படம் எடுத்து சீற்றத்தோடு அந்த பாம்பு பார்த்தது. அவனோ பூக்களைப் போட்டபடி இருந்தான். சர்ப க்ரூர மந்திர பூஜை! அதன் விளைவாக மயானத்தில் சுற்றித் திரியும் பாம்புகள் கூட அவனைச் சுற்றி வட்டமாக எரியும் நெருப்பு வளையத்தை ஒட்டி படம் விரித்தாடி நிற்கத் தொடங்கின. அதைக் கண்டதும் அவனிடம் பெரும் உற்சாகம்!
பூஜை இப்படி நடக்கும் போது, ஸ்ரீமுஷ்ணம் கோயில் நித்திரை மண்டபத்தில் தேசிகன் தங்கயிருந்தார்.
அங்கே தான் அவருக்கான உறக்கம்! வண்டிக்காரன் கிருஷ்ண பாண்டன் மண்டப வாசலில் உட்கார்ந்தபடி துாங்கினான். காலை ஐந்து மணிக்கு கோயில் மணி மூன்று முறை ஒலித்தது. தீப்பந்தம் அவிந்து அடங்கி, புகை பிரிந்தபடி இருந்தது. தேசிகனும் கண் மலர்ந்தவராக தன் இரு கைகளையும் தேய்த்து விட்டு உற்றுப் பார்த்தார். அதன்பின் காலைக்கடனை முடித்து குளத்தில் நீராடி கோபுரத்தை தரிசித்தார்.
அப்போது கோபுரத்தில் இரு கருடன்கள் கலசத்தை மையமிட்டபடி பறந்தன.
அப்போது தான் எதிர்பாராத சம்பவம் நடந்தது. மாந்திரீகனின் பூஜையில் இருந்து விடுபட்டு சீறி வந்த பன்னிரண்டு அடி நீள பாம்பான சங்கபாலன் தாமதியாமல் கிருஷ்ண பாண்டனின் காலில் கொத்தியது.
விஷம் தலைக்கேறியதால் சுருண்டு விழத் தொடங்கினான். அடுத்தபடியாக தேசிகனின் முன்னால் சீற்றமுடன் கடிக்க தயாரானது. இந்த நேரத்தில் சூரியனும் கிழக்கில் உதயமாகிக் கொண்டிருந்தது.