பதிவு செய்த நாள்
03
ஏப்
2020
01:04
சென்னை : சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் கொரோனா பாதிப்பு குறைய பகவான் ராமகிருஷ்ணருக்கு நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜையும், 10 முதல் 11 மணி வரை ஹோமமும் அடுத்ததாக மகா தீபாராதனையும் நடந்தது.
ராமநவமி நன்னாளில், மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொரோனா வைரஸ் உலகிலிருந்து முழுவதும் மறைந்து, மக்கள் அனைவரும் பூரண ஆரோக்கியம் பெற்று, எல்லா வளமும் நலமும் பெற சிறப்பு பூஜையும் வேள்வியும் சாதுக்களால் நிகழ்த்தப்பட்டன. அப்போது கீழ்க்கண்ட பிரார்த்தனைகள் பகவானிடம் சமர்ப்பிக்கிப்பட்டன. பக்தர்கள் அனைவரும் அந்தப் பிரார்த்தனைகளைச் செய்தனர்.
அக்னி ரூபத்தில் நம் எதிரே வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சில பிரார்த்தனைகளை வைப்போம். அவர் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி உலக மக்கள் அனைவருக்கும் அருள்வார்.
1. பிராணதாதரே ஸ்ரீராமகிருஷ்ணரே, கொரானா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அதிலிருந்து மீண்டுவரத் தேவையான மனவலிமையையும் உடல்வலிமையையும் அவர்களுக்கு அளித்திடுங்கள். அவர்களுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: தன்னம்பிக்கையுடன் இருங்கள்; இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடி இருங்கள்.)
2. ஞானமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, உலகெங்கிலும் கொரானா நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற தூய்மைப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிமையையும் மனஅமைதியையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: பாதுகாப்புடன் இருங்கள்; வலிமையுடன் இருங்கள்.)
3. ஸித்தேசுவர ஸ்ரீராமகிருஷ்ணரே, இந்த நோய்க்கு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்; அத்துடன் அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறட்டும். அவர்களுக்கு வலிமையையும் நல்லறிவையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: திடமாக இருங்கள்; வெற்றி பெறுங்கள்.)
4. மங்கள மூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, சமுதாயத்தின் நன்மையைக் கருதி சலிக்காமல் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்கள், போலீஸ் காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிமையையும் மனஅமைதியையும் வழங்குங்கள். (எல்லா திசைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: பாதுகாப்பாக இருங்கள்; ஆரோக்கியமாக இருங்கள்.)
5. பிரேமமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணரே, இத்தகைய துன்பகரமான நாட்களில் ஏழை எளியோர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை வசதிபடைத்தவர்களின் மனதில் எழுப்புங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள வசதிபடைத்தவர்களுக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: நேர்மையாக இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.)
6. தீனநாத ஸ்ரீராமகிருஷ்ணரே, திடீரென்று தோன்றியுள்ள இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை ஏழை எளியோர்களுக்குக் கொடுங்கள்; இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும்படி அவர்களை ஆசீர்வதியுங்கள். எல்லா தினக்கூலி பணியாளர்களையும் பெண்களையும் கருணைகூர்ந்து அருள்புரியுங்கள். அவர்களுக்கு உண்ண உணவும், தங்குவதற்குப் பாதுகாப்பான இடமும் கிடைக்கச் செய்யுங்கள். (எல்லா திசைகளிலும் உள்ள ஏழை எளியோருக்காக உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: வலிமையாக இருங்கள்; நம்பிக்கையுடன் இருங்கள்.)
7. ஸ்ரீபதி ஸ்ரீராமகிருஷ்ணரே, இந்தக் கொடிய நோயால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நமது நாடு சீக்கிரமாக விடுபடவேண்டும்; அதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் ஏற்படுத்தித் தாருங்கள். (எல்லா திசைகளிலும் உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லறிவுடன் இருங்கள்.)
8. அமைதியை அளிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரே, ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல் எல்லா நாடுகளும் ஒன்றுகூடி இந்த நோயை எதிர்க்க வேண்டும்; அதற்கு அருளுங்கள். (எல்லா திசைகளிலும் உங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துங்கள்: அன்புடன் இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.)
9. கல்பதருவே ஸ்ரீராமகிருஷ்ணரே, எல்லா நாடுகளிலும் உள்ள ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் முதியோர்களும் ஆரோக்கியமாகவும், தைரியமாகவும் இருக்கவும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவும் உங்களது பேரருளைப் பொழிந்திடுங்கள். (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்னர் பணிந்து அவரது அருளுக்காகப் பிரார்த்திப்போம்.)
ஓம் ஸர்வே பவந்து ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா: ।
ஸர்வே பத்ராணி பச்யந்து, மா கச்சித் து:க்கபாக் பவேத் ॥
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ॥
‘உண்மையாகச் செய்யப்படும் பிரார்த்னைகளை கடவுள் நிறைவேற்றுகிறார். இதில் சந்தேகம் இல்லை.’—ஸ்ரீராமகிருஷ்ணர்