நாகை : சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல் நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் முருகப் பெருமானான செல்வ முத்துக்குமார சுவாமியையும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தரும் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும் நவகிரக தலங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்தளம் விளங்கிவருகிறது இக்கோயிலில் சுவாமி வைத்தியராக எழுந்தருளி உள்ளார். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை 4448 வியாதிகளை குணமாக்க கூடியதாக கூறப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாள் செல்வ முத்துக்குமாரசாமி மற்றும் செவ்வாய் பகவானான அங்காரணை வழிபட்டால் வியாதிகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிட்டு அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இதனால் உள்ளூர்வாசிகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வெளியூர் பக்தர்கள் வருகை முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் வைதீஸ்வரன் கோயில் பகுதி முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதை கழுகு பார்வையில் காணலாம்.