பெரம்பலுார் அருகிலுள்ள செட்டிகுளத்தில் முருகப்பெருமான் கரும்புடன் காட்சியளிக்கிறார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு இவரை தரிசிப்போம். வணிகர் ஒருவர் வியாபாரத்திற்காகச் செல்லும் வழியில் இரவில் இங்கு தங்க நேர்ந்தது. அரச மரத்தின் கிளை ஒன்றில் படுத்திருந்தார். களைப்பால் உறங்கிய அவர், நள்ளிரவில் சத்தம் கேட்டு விழித்தார். பேரொளியின் நடுவில் காட்சியளித்த சிவலிங்கம் ஒன்றை வானுலக தேவர்கள் கூடி நின்று வழிபடக் கண்டார். தான் கண்ட காட்சியை, மன்னரான பராந்தக சோழனுக்குத் தெரிவித்தார். அப்போது மதுரையை ஆட்சி செய்த குலசேகர பாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தார். மன்னர்கள் இருவரும் வணிகர் குறிப்பிட்ட இடம் தேடி வந்தனர். அப்போது கரும்புடன் ஏந்தியபடி முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார். அவரே சிவலிங்கம் இருக்குமிடத்தை காட்டி மறைந்தார். மன்னர்கள் வியந்து பார்த்த போது, அருகிலுள்ள குன்றின் மீது முதியவர் கரும்புடன் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். விருந்தாளியாக வந்த இடத்தில் சுவாமி தரிசனம் கிடைக்கப் பெற்றதைக் கண்டு மகிழ்ந்த குலசேகர பாண்டியன் இக்கோயிலைக் கட்டினான். 240 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. முருகனின் தலையில் குடுமி உள்ளது. உற்சவர் கையில் கரும்பு இருக்கிறது. வெளியே கடினமாக இருந்தாலும், தன்னகத்தே இனிமையான சாறு கொண்டது கரும்பு. அதுபோல வெளித்தோற்றத்தில் கரடு முரடாக இருந்தாலும், மனதிற்குள் நல்லெண்ணம் என்னும் சாறு இருக்க வேண்டும் என்பதையே இவர் பக்தர்களுக்கு உணர்த்துகிறார். சித்திரை முதல்நாளில் படி பூஜை நடக்கும். பொதிகை சென்ற அகத்தியருக்கு இத்தலத்திலுள்ள முருகன் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி கொடுத்ததால் ‘செட்டிக்குளம்’ என பெயர் வந்தது. குழந்தை பாக்கியம் பெற விரும்புவோர் சஷ்டியன்று பாலாபிேஷகம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தையை கரும்புத் தொட்டிலில் படுக்க வைத்து, கோயிலை மூன்று முறை வலம் வந்து வழிபடுகின்றனர். செல்வது எப்படி திருச்சி – பெரம்பலுார் செல்லும் ரோட்டில் 44 கி.மீ துாரத்திலுள்ள ஆலத்துார். அங்கிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ., விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் நேரம் காலை 8:00 – பகல் 1:00 மணி, மாலை 4:00 – இரவு 7:00 மணி. வெள்ளி, கார்த்திகையன்று காலை 8:00 – இரவு 7:00 மணி. தொடர்புக்கு 99441 17450, 98426 99378, 04328 – 268 008. அருகிலுள்ள தலம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் 20 கி.மீ.,