பதிவு செய்த நாள்
04
ஜூன்
2020
05:06
சென்னை அருகிலுள்ள குன்றத்துாரில் வடக்கு திசை நோக்கியபடி சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கிறார்.
அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகன், அமைதிக்காக திருத்தணிக்குப் புறப்பட்டார். வழியில் இங்குள்ள குன்றில் தங்கினார். அப்போது மலையடிவாரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். சுவாமிக்கு ‘கந்தழீஸ்வரர்’ எனப் பெயர் வந்தது. பிற்காலத்தில் முருகனுக்காக மலையின் மீது அவர் தங்கிய இடத்தில் ஒரு கோயில் உருவானது.
84 படிகள் கொண்ட குன்றுக்கோயில் இது. ஆறு கோணங்களுடன் அமைந்த ஷட்கோண விமானத்தின் கீழ் முருகன் அருள்பாலிக்கிறார். மூலவரின் திருநாமம் சுப்பிரமணிய சுவாமி. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் முருகன் வடக்கு திசை நோக்கி இருக்கிறார். இங்கு வள்ளி, தெய்வானையுடன் ஆகிய இருவருடன் வடக்கு நோக்கியிருக்கிறார். சுவாமிக்கு அபிேஷகம் செய்த விபூதியை பிரசாதமாக தருகின்றனர். முருகன் முன்புள்ள துவார பாலகர்கள் கையில் வஜ்ரம், சூலம் வைத்துள்ளனர். சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தின் விருட்சம்.
திருமணத்தடை அகல சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தியும், ஆடை சாத்தியும், அபிேஷகம் செய்தும் வழிபடுகின்றனர். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் இங்கு அவதரித்தவர். இவருக்கும் இங்கு கோயில் உள்ளது. சேக்கிழார் குருபூஜையன்று சேக்கிழார் கோயிலுக்கு எழுந்தருளி முருகன் காட்சியளிக்கிறார். குன்றின் நடுவில் வலஞ்சுழி விநாயகர் சன்னதி உள்ளது. முருகன் சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளன.
செல்வது எப்படி
* சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ.,
* சென்னை பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
நேரம்
காலை 6:30 – பகல் 12:30 மணி, மாலை 4:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு
044 – 2478 0436, 93828 89430.
அருகிலுள்ள தலம்
சேக்கிழார் கட்டிய நாகநாதசுவாமி கோயில்