வந்தவாசி: வந்தவாசி அடுத்த பொன்னூரில், அம்பலவாண விக்னேஷ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சுரேஷ், 40. ஊரடங்கில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்ததால், பூசாரி சுரேஷ் நேற்று காலை கோவிலை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, கோவில் கதவின் பூட்டு உடைந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே, மூன்று அடி உயர வெண்கல விநாயகர், மற்றும் முருகர் சிலை திருட்டு போனது தெரிந்தது. இதன் மதிப்பு, 22 ஆயிரம் ரூபாயாகும். பொன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.