பதிவு செய்த நாள்
16
ஜூலை
2020
02:07
திருப்பூர்:நேரம் சரியில்லாத சில இழிவானர்கள் செய்யும் செயல்களால் கொரோனா போன்ற கொடிய நோய் உலகை ஆட்டுவித்து வருவதாக, கூனம்பட்டி திருமடம் கருத்து தெரிவித்துள்ளது. திருப்பூர் அருகேயுள்ள கூனம்பட்டி திருமடம், குருகுலம் ஸ்ரீ நடராஜ சுவாமி கூறியதாவது:நான்கு யுகங்களில், கடைசி யுகமான கலியுகத்தில், பக்தியாலே முக்தி என்று கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு, ஆத்மார்த்தமான பக்தி செலுத்தினால் மட்டுமே முக்தி கிட்டும். நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மனம் புண்படும்படி, சிலர் தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். ஸ்ரீ கந்த சஷ்டி கவசம், உலகம் முழுவதும் பரவியுள்ள முருக மந்திரம். பல ஆண்டுகளாக, முருக பக்தர்கள் பாராயணம் செய்து வழிபடுகின்றனர். நேரம் சரியில்லாத சிலர், இதுகுறித்து ஆபசமான தகவல்களை கூறி விமர்சித்துள்ளனர். இதுபோன்ற இழிவானவர்களின் செயல்களால் கொரோனா போன்ற கொடிய நோய் உலகை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது.அவரவர் மதத்தை அவரவர் வழிபட வேண்டும். மற்ற பக்கம் தலையிடக்கூடாது. உலகெங்கும் வாழும், பல கோடி இந்துக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர் வருந்தும் வகையில் விமர்சனம் செய்தவர்கள், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஆண்டவன் திருவருள் அடியார் குறைகளை தீர்த்து வைக்கும். குறைகளை தீர்த்து, வளம் பெருக்கும் முருகனின் ஸ்தோத்திரத்தை இழிவு செய்வது மிகப்பெரிய குற்றம்.இவ்வாறு, அவர் கூறினார்.