ஆடி வெள்ளியன்று (ஜூலை17,24,31, ஆக.7,14) வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்யமாக அம்மனுக்கு பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். அன்று சிறுமிகளுக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி வளையல் அளித்து அவர்களை அம்மனாகப் பாவித்து உணவளிப்பது சிறப்பு. ஆடி வெள்ளிகளில் கோயில்களில் விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வர். அப்போது அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே நேரத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை.