பதிவு செய்த நாள்
07
ஆக
2020
03:08
சென்னை; மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றும், 6,664 பேருக்கு, தலா, 1,000 ரூபாயை, ஜூலை மாதத்துக்கு வழங்க, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மனு தாக்கல்தினமலர் நாளிதழின், திருச்சி - வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளர், ஆர்.ஆர்.கோபால் ஜி தாக்கல் செய்த மனு:கோவில்கள் மூடப்பட்டு இருப்பதால், அதை நம்பி வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 300 கோடி ரூபாய் உபரி நிதியாக உள்ளது. இதில் இருந்து, அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்களுக்கு உதவி செய்யலாம்.இவர்களுக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய், மற்ற பணியாளர்களுக்கு, 7,500 ரூபாய் வழங்கும்படி, அறநிலையத் துறைக்கு, 2020 மே, 20ல் மனு அனுப்பினேன்; பதில் இல்லை.எனவே, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், திருவிளக்கு ஏந்தி செல்பவர்கள் என, அனைத்து ஊழியர்களுக்கும், நிதி உதவி வழங்கும் படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கவுசிக் ஆஜரானார்.தள்ளிவைப்புஅறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி, தாக்கல் செய்த கடிதம்:மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரி மற்றும் டிக்கெட் கட்டணத்தில் பங்கு பெறும் ஊழியர்கள் என, 12 ஆயிரத்து, 41 பேருக்கு, இரண்டு மாதங்களுக்கு உதவித் தொகையாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.இவர்களுக்கு, மே, 16 முதல் ஜூன் வரைக்கும், தலா, 1,500 ரூபாய் வழங்க, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிராமங்களில் உள்ள சிறிய கோவில்கள் அனைத்தும் வழிபாட்டுக்காக, ஜூலை முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திறக்கப்படாத கோவில்களில் பணியாற்றும், 6,664 பேருக்கு, தலா, 1,000 ரூபாய் ஜூலை மாதத்துக்கு வழங்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, அறநிலையத் துறையின் உத்தரவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.