பதிவு செய்த நாள்
15
ஆக
2020
10:08
ராமநாதபுரம்: ராமர்,சூரியபகவான் வணங்கிய புனித ஆன்மிக ஸ்தலமானராமநாதபுரம் உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஊருக்கே குடிநீர் வழங்கும் ஊரணி பராமரிப்பு இல்லாமல் பாழாகியுள்ளது.திருவாடானை தாலுகா உப்பூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெயில் உகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் இக்கோயிலில் திருப்பணி செய்துள்ளனர்.தற்போது ராமநாதசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஸ்தல வரலாறு: சிவபெருமானை எதிர்த்து தட்சன் நடத்தியயாகத்தில் பங்கேற்றதால்சூரியபகவான் தனது பாவத்தை போக்க பாண்டிய நாட்டில் கிழக்கு கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புவனவாசல் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்திருந்த வன்னிமந்தார வனத்து வந்து விநாயகரை நினைத்து தவம் செய்தார். அப்போது விநாயகர் காட்சியளித்து சூரியபகவானை பாவத்தை போக்கினார். அவ்விடத்தில் சூரியனின் கதிர்கள் முழுமையாக படும் விதத்தில் வெயில் உகந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
சித்தி, புத்தியுடன் விநாயகர் திருக்கல்யாணம்ராமர் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் போது, சூரியபகவான் வணங்கிய விநாயகர் கோயில் இருப்பதை ஞானத்தின் மூலம் அறிந்து, இங்குள்ள சூரிய தீர்த்தை எடுத்து விநாயகருக்கு அபிேஷகம் செய்தார். மேலும் சித்தி, புத்தி விநாயகருக்கு திருமணம் செய்து வைத்தாக வரலாறு உள்ளது. ராமர் அபிேஷக தண்ணீர் எடுத்த சூரிய தீர்த்தக்குளம் இன்றும் கோயிலின் தென்பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்து தினமும் விநாயகருக்கு அபிேஷகம் நடக்கிறது. தென்மாநிலங்களில் உப்பூர் விநாயகருக்கு மட்டும் தான் சித்தி, புத்தி தேவிகளுடன் திருக்கல்யாணம் நடக்கிறது.
முதல் வணக்கம் விநாயகருக்கே: கோயில் குருக்கள் ரவிக்குமார் கூறுகையில்,உப்பூர் ஒருகாலத்தில் லவணபுரம் என அழைக்கப்பட்டது. அதாவது லவணம் என்றால் உப்பு எனப்பொருள் இதனையடுத்து உப்பூர் என மாறியது. ராமர் இலங்கைக்கு போர் புரிய செல்வதற்கு முன் முதலில் உப்பூர் வெயில் உகந்த விநாகரை வணங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகராமேஸ்வரம் செல்வதற்கு முன் பக்தர்கள் முதலில் வெயில் உகந்த விநாயகரை வணங்கிவிட்டு, தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரங்களை வணங்கி அதன்பின் ராமேஸ்வரம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது கும்பாபிேஷக திருப்பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர்சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் 8 ம் நாள் சித்தி, புத்தி தேவிகளுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பத்தாம்நாள் விநாயகர் சதுர்த்தி அன்று ரிஷப வாகனத்தில் விநாயகர் கடற்கரையில் தீர்த்தவாரி, முளைப்பாரி கரைப்பு, பூக்குழி இறங்குதல் நடக்கிறது. தினமும் காலை 6:00 மணி முதல் 12:00 மணிவரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00மணி வரை நடைதிறந்திருக்கும், 4 கால பூஜைகள் நடக்கிறது,என்றார்.
விநாயகர் அபிேஷகத்திற்கு சிக்கல்: உப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், புகழ்பெற்ற உப்பூர் விநாயகர் கோயிலில் அடிப்படை வசதி இல்லவே இல்லை. கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் கலையரங்கு மேற்கூரை சேதமடைந்துள்ளது. விநாயகருக்கு அபிேஷகம் செய்வதற்குரிய சூரிய தீர்த்தக்குளத்தில் ஆண்டிற்கு 4 முதல் 6 மாதம் தான் தண்ணீர் இருக்கும். இதனால் பிற மாதங்களில் அபிேஷகத்திற்கு தீர்த்தம் எடுக்க முடியவில்லை.
விநாயகர் அபிேஷகத்திற்கு தினமும் பயன்படுத்தும் வகையில் குளத்தில்ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும்.குடிநீர் ஊரணியும் பாழ் மேலும் விநாயகர் கோயில் வடக்கே உள்ள ஊரணி தண்ணீரைத்தான் உப்பூர் மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பராமரிக்கப்படாமல் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாகியுள்ளது. இதனால் ஒருகுடம் குடிநீரை ரூ.10க்கு விலைவாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். கோயில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தேரோட்டத்தின்போது மின்வயர்களை அகற்றுவதால் 2 நாட்கள் மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் தேர்வீதியின் இருபுறங்களில் உள்ள மின்கம்பங்களை ஒருபுறத்தில் அமைக்க வேண்டும். குடிநீர் ஊரணியை சுத்தம் செய்து வேலி அமைக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக குளியல், கழிப்பறை கட்டித்தர வேண்டும்,என்றார்.