பதிவு செய்த நாள்
25
செப்
2020
09:09
திருப்பதி:திருமலையில், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருமலைக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வந்தார். அதேபோல், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, சத்திர பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக திருமலைக்கு வந்தார். இவர்கள் ஒன்றாக இணைந்து ஏழுமலையான் தரிசனத்தில் பங்கேற்றனர். நேற்று காலை ஏழுமலையானை தரிசிக்க, கோவில் முன் வாசலுக்கு வந்த கர்நாடக முதல்வரை வரவேற்று, ஆந்திர முதல்வர் கோவிலுக்குள் அழைத்து சென்றார்.
முதலில் கொடிமரத்தை வணங்கிய பின், இருவரும் வெள்ளி வாயிலை கடந்து உள்ளே சென்றனர். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய இருவரையும், ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள், லட்டு, வடை, ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்தனர்.
சுந்தரகாண்ட பாராயணம்: ஏழுமலையானை தரிசித்த பின், திருமலையில் உள்ள நாத நீராஜன மண்டபத்தில் நடந்து வரும் சுந்தரகாண்ட பாராயணத்தில், இரு மாநில முதல்வர்களும் பங்கேற்று, ஸ்லோகங்களை கூறினர்.