பதிவு செய்த நாள்
25
செப்
2020
09:09
சென்னை, பாரிமுனையில் உள்ள, கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை, போலி ஆவணங்கள் வாயிலாக, கூறுபோட்டு விற்கும் பணி, விறுவிறுவென நடப்பது அம்பலமாகிஉள்ளது.இனியும் காலம் தாழ்த்தாமல், அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலி பத்திரம்: சென்னை, பாரிமுனையில், முத்துகுமார தேவஸ்தானம் எனப்படும், கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, ஜமீன்தார்கள், வாரிசு இல்லாதவர்கள், ஆன்மிகவாதிகள் என, பலரும் தங்களின் நிலங்களை காணிக்கையாகவும், தானமாகவும் வழங்கி உள்ளனர்.அவற்றில் சில, எருக்கஞ்சேரி, மணவழகர் தெரு, கந்தசுவாமி கோவில் தெரு, அண்ணா சாலையில் ஒரு சில இடங்களில் உள்ளன. அவற்றின், தற்போதைய மதிப்பு, 500 கோடி ரூபாய்.
அங்கு வசிப்போரிடம், வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. சில காலமாக, அவர்கள் வாடகை கொடுப்பதை நிறுத்தி உள்ளனர். இதற்கு, வசிப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படையில், மக்களிடம் எண்ணத்தை விதைத்து, கணிசமான தொகையை வசூலித்து, போலி பத்திரப்பதிவு செய்யும், உள்ளூர் அரசியல்வாதிகளே காரணம்.
மேலும், கோவில் நிலத்தின் சர்வே எண் மாற்றப்பட்டு, அதை, மாதவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வகையில், கந்தக்கோட்டம் கோவிலுக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், முறைகேடாக போலி பத்திரம் போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டும் இல்லாமல், கோவில் நிலத்தை, கிராம நத்தமாக காண்பித்து, போலி ஆவணங்கள் வாயிலாக, 60க்கும் மேற்பட்ட இடங்கள் விற்கப்பட்டுள்ளன. அவ்வாறு முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட இடங்களில், கட்டுமான பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன. இதுகுறித்து, ஆன்மிக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: கோவில் சொத்துக்களை, முறையாக ஆவணப்படுத்தாததும், பராமரிக்காததும், கோவில் நிர்வாகத்தின் அலட்சியப்போக்குமே, நிலங்கள் கபளீகரம் செய்யப்பட முக்கியக் காரணம்.கோவில் இடங்கள், முறைகேடாக விற்கப்படுவது குறித்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த முறைகேடுகளுக்கு, கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலரும் துணையாக உள்ளனர். எனவே, கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த தெளிவான விபரங்களை, அறநிலையத் துறை முழுமையாகக் கண்டுஅறிந்து, அவற்றை மீட்க வேண்டும்.
பதிவேற்றம்: கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை முறைப்படி, ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். போலியாக பதியப்பட்ட பத்திரங்கள் அனைத்தையும் ரத்து செய்து, மீண்டும் கோவில் பெயரில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.இது போன்ற முறைகேடுகள், மேலும் நிகழாமல் தவிர்க்க, கோவில் சொத்துக்களின் முழு விபரம், தற்போதைய நிலை ஆகியவற்றை, கோவிலில் பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், நிரந்தரமாகப் பொறிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எங்களுக்கு தொடர்பில்லை: கோவில் நிலம் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வருவதாக, எங்களுக்குப் புகார் கடிதம் வந்துள்ளது. நாங்கள், சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், புகார் அளித்துள்ளோம். கோவில் இடத்தை, புறம்போக்கு நிலம் என பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, கோரியுள்ளோம். இதுகுறித்தப் பணிகள் நடக்கின்றன. கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து, காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை நிறுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். மற்றப்படி, கோவில் நிர்வாகத்திற்கும், இந்த முறைகேடிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர். -நமது நிருபர்-