பதிவு செய்த நாள்
26
செப்
2020
10:09
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவித்து வரும் நிலையில், 7 ம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளை படியெடுத்து அதன் விபரங்களை கூற மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கத்தை கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டது. கடந்த ஓராண்டாக இப்பணி நடந்தது.இதுகுறித்து சாந்தலிங்கம் கூறியதாவது:ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை 60 கல்வெட்டு விபரங்களை மட்டும் ஆங்கில குறிப்புகளாக வெளியிட்டுள்ளது.
முழுமையான தகவல் கிடைக்காத நிலை இருந்தது. அந்த குறையை போக்கவே இந்த ஆய்வு நடந்தது. 410 கல்வெட்டுகளில் 80 கல்வெட்டுகள் முழுமையான செய்திகளுடன் மன்னர்கள் பெயர் தாங்கி இருக்கின்றன. மற்றவை உருவங்கள் பதித்தவையாக உள்ளன. கோயில் கட்டுமான பணியின்போது இதன் முக்கியத்துவத்தை அறியாமல் கண்ட இடங்களில் துண்டு துண்டு கற்களாக தலைகீழாக வைத்து பதித்துள்ளனர்.
முதல் கல்வெட்டுமுதல் கல்வெட்டு என்பது வைகைக்கரையில் கிடைத்தது. இது 1961ல் வைகையில் கண்டெடுக்கப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் பதிக்கப்பட்டது. கி.பி., 700ஐ சேர்ந்த கூன்பாண்டியன் காலத்து கல்வெட்டு இது. வைகையில் தடுப்பணை அமைத்து திருச்சுழி, வீரச்சோழன் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றது குறித்து அது விளக்குகிறது. தமிழ், கிரகந்த மொழியில் அந்த கல்வெட்டு உள்ளது.மீனாட்சி கோயில் தொடர்பாக கல்வெட்டுகளை பார்க்கும்போது தேவார பாடல்களில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது.
அதில் அங்கையற்கண்ணி உடன் ஆலவாய் அண்ணல் என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே 7 ம் நுாற்றாண்டில் இக்கோயில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டிருக்க வேண்டும். பின்னால் ஏதோ காரணத்தால் இடிந்த பின் இப்போதைய கோயில் 13ம் நுாற்றாண்டில் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். இதை கல்வெட்டுகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
பாண்டியர்களின் 60 கல்வெட்டு முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்( 1190 - 1216) கல்வெட்டே தற்போதுள்ள கோயில் கல்வெட்டுகளில் முதலாவதாகும். இதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் பெயர்களில் 60 கல்வெட்டுகள் உள்ளன. அவை கோயிலுக்காக பல்வேறு இடங்களில் நிலங்களை பெற்று கொடுத்தது குறித்து தெரிவிக்கின்றன.
கிழக்கு கோபுரத்தின் 2ம் தளத்தில் துாண்களில் பாடல்கள் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் குறித்த தமிழ் பாடல்கள் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் திருஞானசம்பந்தர் மதுரை வந்து ஒரு மடத்தை உருவாக்கியது குறித்தும், அதன் நிர்வாகத்திற்காக சோழவந்தான் பகுதியில் நிலம் கொடுத்தது குறித்தும் தெரிவிக்கிறது.
ஒய்சால மன்னர்கள் பாண்டிய மன்னர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். சோழர்களிடத்தில் பெண் எடுத்திருந்தனர். இருவருக்கும் பொதுவான ஆட்சி பிரதிநிதியாக சமயபுரம் அருகில் கண்ணனுார் பகுதி உருவாக்கப்பட்டு ஆட்சி செய்ய ஒதுக்கினர்.அம்மனின் பெயர் நாச்சியார்மதுரையில் தங்கியிருந்த விக்கிரசோழனை மைத்துனன் என சுந்தரபாண்டியன் தன் கல்வெட்டில் குறிப்பிடுகிறார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயர் மிகவும் பிற்காலத்தில்தான் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இறைவனின் பெயர், திருவாலவாய உடைய நாயனார், நம்பி, சொக்கன் என்றும், அம்மன் பெயர் திருக்காவகோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொக்கநாதர் என்ற பெயர் 1700ல் மதுரை நாயக்கர் ஆட்சியில்தான் அழைக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரை 1898 ல் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் உள்ள திருவாட்சி விளக்கில் சிவகங்கை மைனர் ஜமீன் ராஜா துரைசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.இக்கோயில் 1750 காலக்கட்டத்தில் மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. குறிப்பாக இயற்கை காரணங்களால் கருவறை, நடராஜர் மண்டபம், எழு நிலை கோபுரமும் அழிந்தன.
இதையெல்லாம் பழுதுநீக்கி புதிதாக கட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டன என்ற செய்தியையும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. திருவேடகத்தில் இக்கோயில் சார்பில் கோ சாலை மடம் உருவாக்கப்பட்டு, பராமரிக்க நிலங்கள் வழங்கிய விபரமும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.அப்போதே ஆங்கில கல்விமுஸ்லிம் படையெடுப்பால் கோயிலில் 40 ஆண்டுகள் வழிபாடு தடைபட்டதாக அறிந்திருப்போம்.
இக்காலகட்டத்தில் எந்தவிதமான அழிவுகள் ஏற்பட்டன என்ற விபரம் கல்வெட்டுகளில் இல்லை. கிழக்கு கோபுரம் 1190ல் கட்டப்பட்டது. அதில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் மிகப்பெரிய கல்வெட்டு வடிக்கப்பட்டது. தான் பிறந்த புனர்பூஜ நட்சித்திரத்தில் சிறப்பான பூஜை செய்து அதற்கு எவ்வளவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கர் காலத்தில் பஞ்சகம்மாளர்களுக்கு கொடுத்த சலுகைகள் விபரம் உள்ளது. அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் 1710 ல் சீர்பாதந்தாங்கும் 64 பேருக்கு மானியமாக கொடுக்கப்பட்ட சாமநத்தம் உட்பட 4 கிராமங்களை திரும்ப பெற்றதால் போராட்டம் வெடித்தது. ஆண்டமுதலி மகன் சொக்கமுதலி கோபுரத்தில் ஏறி விழுத்து இறந்தான் என்ற விபரமும் இங்குள்ள கல்வெட்டில் அறிய முடிகிறது.
காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் 1842ல் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் ஒரு கல்வெட்டை நிறுவியுள்ளார். அதில் ஒரு லட்சம் வராகன் கொடையளித்து அதன் வட்டியில் இருந்து தினப்பூஜை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் பத்து வராகன் மாத ஊதியத்தில் ஆசிரியர் ஒருவரை நியமிக்கவும், ஒரு ஆசிரியருக்கு மாதம் 5 வராகன் ஊதியம் கொடுத்து அப்பகுதி சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு விபரங்களை நுாலாக தயார் செய்துள்ளோம். இதற்கு உதவியாக இருந்தவர்கள் அரசு காப்பாட்சியர் மருதுபாண்டியர், ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் என்றார்.