பதிவு செய்த நாள்
29
செப்
2020
09:09
சென்னை : மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை சென்றவர்கள், அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.மானசரோவர் பயணித்தவர்களில், 500 பேருக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் சென்றவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், அரசு மானியமாக வழங்கப்படும்.அதன்படி, மானசரோவர், முக்திநாத் தலங்களுக்கு, 2019 ஏப்., முதல் ௨௦௨௦ மார்ச், 31ம் தேதி வரை, யாத்திரை சென்றவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க, கடந்த ஏப்ரல், 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால், இத்திட்டத்திற்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க முடியாமல், யாத்திரை செய்தவர்கள் தவித்து வருகின்றனர். தற்போது, சீனாவுடனான எல்லை பிரச்னையாலும், கொரோனா தொற்று காரணமாகவும், இந்தாண்டு புனித யாத்திரை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, கடந்த ஆண்டு பயணித்தவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளித்து, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.