சார்லஸ் என்னும் இளைஞன் இருந்தான். அவனுடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் 12 பேர் இருந்தனர். அவர்கள் கூட்டாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். நீதி, நேர்மையை இழந்தபின் மனிதன் வாழ்வதில் அர்த்தமில்லை என அவர்களுக்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் பொருட்படுத்தவில்லை. ஒருகட்டத்தில் சார்லஸ் அவர்களின் உறவை கைவிடத் துணிந்தான். ஆனாலும் அவர்கள் திருந்தி நல்வழியில் நடக்க வேண்டும் என மனசாட்சி உறுத்தியது. ஆண்டவர் மீது பாரத்தை வைத்து நண்பர்களுக்கு மொட்டை தந்தி அனுப்பினான். “உங்கள் ரகசியங்கள் அம்பலமாகப் போகிறது. ஓடி விடுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தான். தந்தி கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நண்பர்கள் அனைவரும் ஊரை விட்டு ஓடினர். ஏனெனில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் தண்டனைக்கு ஆளாவாமோ என்ற பயமே காரணம். தனது நண்பர்களை ஒழுக்கம் மிகுந்தவர்களாக மாற்ற சார்லஸ்க்கு வேறு வழி தெரியவில்லை. “உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து வந்து பிடிக்கும்” என்கிறது பைபிள். அவர்களை நல்வழிப்படுத்தவே சார்லஸ் இந்த நடவடிக்கையை எடுத்தான். பாவிகள் திருந்தாவிட்டால் செய்த பாவத்தாலேயே அழிவது உறுதி. அதற்குரிய தண்டனையில் இருந்தும் தப்ப முடியாது.