பதிவு செய்த நாள்
31
அக்
2020
05:10
மதுரை : மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் கோவிலில் சங்கர லிங்கம் சுவாமிக்கும், ஐப்பசி மாத பெளர்ணமி அன்னாபிஷேக சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சங்கர லிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்கவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி, அன்னாபிஷேகம், காய்கறிகள் அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவரும் சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், வேதசாம புராண பாடல்கள் பாடினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைய உபயதாரர்கள் அட்டப்பட்டி சரவணன் குடும்பத்தினர், மற்றும் சிவாலயபுரம் சிவனடியார்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.