திருவண்ணாமலை கிரிவலம் செல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவர்கள் இயற்கை எய்தினால் அந்த உயிர் கைலாயத்தை அடைந்ததும் தேவர்கள் பணிவிடை செய்ய ஓடிவருவர். சந்திரன் வெள்ளிக்குடை பிடித்து வரவேற்பான். தொடர்ந்து சூரியன் கையில் விளக்கேந்தி வருவதுடன், தர்ம தேவதை இன்முகத்துடன் அழைத்துச் செல்வாள். பலவகை பூக்களை நடைபாதையில் துாவியபடி இந்திரன் வரவேற்பான். குபேரன் கை கூப்புவான் எண்திசைக் காவலர்கள் மலர்மாரி பொழிவர். தேவலோகப் பெண்களான ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை ஆடிப்பாடி மகிழச் செய்வர். கங்கா, யமுனா என நதிதேவதைகள் சாமரம் வீசுவர். மேகங்கள் அமுதம் ஏந்தி வந்து தாகம் தீர்க்கும். மகாலட்சுமி வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து தருவாள்.