திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி தடைபடும் போது பெற்றோரின் மனம் பாடுபடும். இதைப் போக்கி விரைவில் கெட்டிமேளம் ஒலிக்க பரிகாரமாக வீட்டில் மாவிளக்கு ஏற்றலாம். விநாயகர், முருகன், மாரி, காளி, காமாட்சியை வழிபட்டால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையிலும் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டால் சனிக்கிழமையிலும் இதைச் செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி மாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைய வேண்டும். அதை காமாட்சி விளக்கு போல குழிவாகப் பிடித்து, அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பஞ்சுத் திரியிட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் வாழை இலை அல்லது தாம்பளத்தில் இரண்டு தேங்காய் மூடி, பழம், வெற்றிலை பாக்கு வைத்து மாவிளக்கை ஏற்ற வேண்டும். அப்போது ஸ்லோகம், பாடல்கள் பாடுவது சிறப்பு. திருமணம் நடந்தபின் மீண்டும் ஒருமுறை மாவிளக்கு ஏற்றி வழிபடுவது அவசியம்.