பதிவு செய்த நாள்
24
ஜன
2021
06:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தைக்கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, தை கிருத்திகை என்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதுதவிர மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கட்டண தரிசனத்தில், இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றத்தில், சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், தை கிருத்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, மலைக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, உற்வசர் மற்றும் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், உள் புறப்பாடு எழுந்தருளினார்.இதே போல், நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று, தை கிருத்திகை சிறப்பு தரிசனம் நடந்தது.