அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த நரஹரிதாஸ் சிறுவனை ஆதரித்தார். ஒரு நல்ல நாளில் சிறுவனுக்கு உபநயனம் நடத்த எண்ணி ஊராரை அழைத்தார். அவர்களிடம்,‘‘ என் வளர்ப்பு மகனான இவனுக்கு சாஸ்திரங்களை கற்றுக் கொடுக்கப் போகிறேன். மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிவித்தால் நம் பாவம் நீங்கும். அதுபோல, எதிர்காலத்தில் இவன் சொல்லும் ஹரிகதைகளைக் கேட்பவர்கள் பாவம் நீங்கி மனத்துாய்மை பெறுவர். அதனால், இவனுக்கு ‘துளசிதாசன்’ என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார். ஊராரும் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். துளசிதாசன் என்னும் அச்சிறுவனே பின்னாளில் ஹிந்தியில் ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்றார்.