மும்மூர்த்திகளுக்கும் தாயாகும் பாக்கியம் பெறுவதற்காக, அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா நீண்ட காலம் தவமிருந்தாள். அவளின் எண்ணம் நிறைவேறும் காலம் கனிந்தது. மும்மூர்த்திகளும் சந்நியாசி கோலத்தில் அனுசூயாவிடம் வந்து நிர்வாண நிலையில் உணவளிக்க வேண்டினர். அனுசூயா சாதுர்யமாக, தன் கற்பின் திறத்தால் மூவரையும் குழந்தைகளாக மாற்றி பாலுாட்டினாள். கணவர் அத்திரி முனிவரின் திருவடியில் அந்த மூவரையும் ஒப்படைத்தாள். ஞான திருஷ்டியால் நிகழ்ந்ததை அறிந்த முனிவர், குழந்தைகளை ஒரே உருவமாக்கினார். மும்மூர்த்தியின் அம்சமான இவர் ‘தத்தாத்ரேயர்’ என பெயர் பெற்றார். மலர்ந்த முகம் கொண்ட இவரைக் கண்ட யதுமன்னன், அதற்கான காரணம் கேட்டான். “மனிதர் என்றில்லாமல் சிறு உயிரும் கூட எனக்கு குருவாக இருந்து நற்பண்புகளை உபதேசித்தன. அதனால் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றார். பெரிய ரிஷியான இவரை வழிபடுவோரின் வாழ்வில் குறைவிருக்காது.