மும்பை: உலகப் புகழ்பெற்ற மும்பை விநாயகர் உற்சவம், கொரோனா தொற்று காரணமாக, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஊர்வலம் இல்லாமல் கொண்டாடப்படும் என, கணேஷ் மண்டல் தெரிவித்துள்ளது. மஹாரா ஷ்டிரா மாநிலம் மும்பை, லால்பாக்கில் உள்ள, லால்பாக் ராஜ் என அழைக்கப்படும் விநாயகர் கோவில் உலகப் புகழ்பெற்றது. கடந்த 93 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் சினிமா பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஊர்வலம் மற்றும் கொண்டாட்டம் நடக்கவில்லை.
சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மட்டுமே வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தடைஇந்த ஆண்டு அடுத்த மாதம் 10ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது.கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் விழா நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போலவே வழிகாட்டு நெறிமுறைகளுடன், ஊர்வலம் எதுவுமின்றி, சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக, விழா கமிட்டியான கணேஷ் மண்டல் தெரிவித்துள்ளது.