லக்னோ: உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அயோத்தி, காசியை தொடர்ந்து மதுராவிலும் பிரம்மாண்ட கோவில் கட்ட ஏற்பாடுகள் தயார் என கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது. இன்னும் 2 மாதங்களில் அம்மாநில பொதுத் தேர்தல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தனது சமூக வலைதள பக்கத்தில், “அயோத்தி மற்றும் காசியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. மதுராவிலும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.” என கூறியுள்ளார்.
மேற்கு உத்திரபிரதேச நகரமான மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. அங்கு கிருஷ்ண ஜென்மபூமிக்கு அருகே ஷாஹி இத்கா எனும் 17-ம் நூற்றாண்டின் முக்கிய மசூதி அமைந்துள்ளது. “அந்த இடத்தில் கோவிலின் ஒரு பகுதி இருந்ததாகவும், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் அது அழிக்கப்பட்டதாகவும் அதனை மீட்க உத்தரவிட வேண்டும். மசூதியை அகற்ற வேண்டும்” என கடந்த ஆண்டு மதுரா சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிப்ரவரியில், மதுராவில் உள்ள மற்றொரு நீதிமன்றம் ஷாஹி இத்கா மசூதியின் நிர்வாகக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மனு தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை கோரியது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னதாக அகில பாரத ஹிந்து மகா சபை கடந்த திங்களன்று ஊர்வலமாக சென்று ஷாஹி இத்கா மசூதியில் கிருஷ்ணர் சிலையை நிறுவ திட்டமிட்டு இருந்தது. பின்னர் அதனை ரத்து செய்தது. இது போன்ற சம்பவங்களால் மதுராவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.