பதிவு செய்த நாள்
25
ஜன
2022
04:01
திருத்தணி: கொரோனா தொற்று காரணமாக, மூன்று நாட்களுக்கு பின் நேற்று, முருகன் கோவில் திறக்கப்பட்டதால், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதியில்லை.மேலும், மேற்கண்ட நாட்களில் மலைக்கோவில் தேர்வீதியில் தடுப்புகள் அமைத்து,கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் வராதப்படி ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையில் நேற்று, மூன்று நாட்களுக்கு பின், கோவில் திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு, காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இதில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்து மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தனர்.ஆறுபடை வீடு முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று மலைக் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.