பதிவு செய்த நாள்
17
மே
2022
08:05
திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் ஏழு மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குற்றச்சாட்டு: பக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய வசதிகள், சுகாதார வசதிகள் இக்கோவிலில் இல்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக தரிசன முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தர்ம தரிசன முறை மட்டும் அமலில் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என, இரு வரிசைகளில் பக்தர்கள் செல்ல வேண்டும்.
இறுதியாக இரண்டு வரிசைகளும் சேர்ந்து, ஒரே வரிசையாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகிறது.
அது வரை குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என, அனைவரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.முன்பு இதுபோன்ற நிலை இல்லை. தற்போது தான் சுவாமியை தரிசிக்க இவ்வளவு நேரம் ஆகிறது என, பக்தர்களிடம் குற்றச்சாட்டு உள்ளது. இயற்கை உபாதைகளுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்து வெளியில் செல்வதற்கு பாதைகள் இல்லை. இதனால், பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். புதிய தரிசன முறையால் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல புகார்கள் வந்த போதிலும், கோவில் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பக்தர்களின் குறைகளை போக்கவும், விரைவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
சேதமடைந்த சிற்பங்கள்!
கோயில் கோபுரத்தின் எதிரே உள்ள கல் வசந்த மண்டபத்தில் பங்குனி, வைகாசி மாதங்களில் ௧௦ நாட்கள் உற்சவம் நடத்தப்படும். சுவாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதித்த தங்க நகைகள் அணிவிக்கப்படுகின்றன. அங்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை. தானியங்கி கேமராக்களும் இல்லை. அனைத்து மண்டபங்களிலும் தானியங்கி கேமராக்களை பொருத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணி, மாசி திருவிழாக்களிலும் தனியார் மண்டபங்களுக்கு சுவாமி எழுந்தருளும் நாட்களிலும், தெய்வானை திருமண மண்டபத்திலும் கேமரா பொருத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலை சுற்றிய பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்கவும், கோவிலின் சிறிய கோபுரங்களில் சேதமடைந்த சிற்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.