குச்சனுார் சனீஸ்வர பகவான் கோவிலில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2022 08:08
சின்னமனுார்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது வாரம் இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் சுயம்புவாக பகவான் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் ஆடிமாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா கொண்டாடப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்தாண்டு கடந்த ஜூலை 17 முதல் ஆக. 20 ம் தேதி வரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நடந்து வருகிறது.. கடந்த ஜூலை 23 ல் கலிப்பணம் கழித்து, சுத்தநீர் தெளித்து கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த ஜூலை 23, 30 ம் தேதிகளில் முதல் இரண்டு சனிக்கிழமைகளில் திருவிழா முடிந்த நிலையில் இன்று மூன்றாவது வாரமான சனிக்கிழமை பெருந் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து பகவானை தரிசித்தனர் . இங்குள்ள சுரபி நதியில் குளித்து காக்கை வாகனங்களை வாங்கி பகவானுக்கு படைத்தனர். எள் தீபம் ஏற்றுதல், உப்பு போடுதல் போன்ற பரிகாரங்களை செய்தனர். நேற்று இரவு சக்தி கரகம் எடுத்தல், பகவானுக்கு மஞ்சன காப்பு சாத்துதல் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் வீதி உலா நடைபெற்றது.